2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புகைப்படப் போட்டியில் வடக்கு – கிழக்கு மாகாண போட்டியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற தேசிய புகைப்படப் போட்டியில் வடக்கு கிழக்கினைச் சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைக் கைப்பற்றியிருந்தபோதிலும் இந்த ஆண்டு போட்டியில் வடக்கு கிழக்கினைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு ஒரு சான்றிதழ் தரம் கூட கிடைக்காமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர்
“இந்தத் தேசிய புகைப்பட விழாக்களில் எம் போன்ற வட கிழக்குக் கலைஞர்களிற்கு பெரிய மரியாதையோ ஈடுபாடோ இல்லையாயினும், இதைவிட்டால் ஓரளவுக்குப் பெயர் சொல்லக்கூடிய வேறு எந்த விழாக்களோ, விருதுகளோ இங்கே இல்லை என்பதே கசப்பான உண்மை.
அந்தவகையில் இந்தமுறை “தேசிய புகைப்பட போட்டியில்“ கலந்துகொண்ட வடக்குக் கிழக்குப் போட்டியாளர்களின் படங்களை போட்டிக்குள்ளேயே சேர்த்துக்கொள்ளவில்லை என்று நம்பத்தகுந்தவர்களிடமிருந்து அறியக்கிடைத்தது. மேலும் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ்கள் கூட அனுப்பப்படவில்லை. போனமுறை முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்ற போட்டியாளர்கள் கூட இங்கிருக்கிறார்கள், ஆனால் இந்தமுறை ஒரு சான்றிதழ் அளவுக்குக் கூட வட, கிழக்குக் கலைஞர்கள் தகுதியற்றுவிட்டார்களா?
இந்தமுறை திட்டமிட்டு வட, கிழக்குக் புகைப்படக் கலைஞர்கள் ஓரம் கட்டியிருக்கிறார்கள்.
பேசாமல் இனிமேல் “சிங்கள தேசிய புகைப்பட விழா“ என்று தலைப்பைப் போட்டு விழாவை நடாத்துங்கள் பொருத்தமாக இருக்கும்” என குறிப்பிட்டிருக்கிறார்.