கடற்படை கப்பலைக் கடத்தி அமெரிக்க கப்பலைத் தாக்க சதித் திட்டம் தீட்டிய குற்றத்துக்காக பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கராச்சி கடற்படை தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அங்கு நிறுத்தப்பட்ட “பி.என்.எஸ்.ஸுல்ஃபிகர்’ போர்க்கப்பலைக் கடத்துவதற்காக அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,நால்வர் பிடிபட்டனர். அந்தக் கப்பலைச் செலுத்தி அமெரிக்க கடற்படைக்கு சொந்மான எரிபொருள் கப்பலைத் தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் . தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகளுக்கு அந்த தாக்குதலில் தொடர்பு இருப்பது வெளியானது. அவர்களுக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை நடைபெற்று வந்துள்ளது. விசாரணையின் முடிவில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமாகியது.
அவர்களுக்கு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ராணுவ நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விசாரணை குறித்து வெளியுலகில் யாருக்கும் தெரியாத நிலையில், குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை சிறையில் மகனை சந்திக்கச் சென்றபோது, விசாரணையின் முடிவு தெரிய வந்தது.
அவர் அளித்த பேட்டியின் அடிப்படையில் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து “தி டான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.