யாழ் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று புதன்கிழமை (20) காலை யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடி அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதோடு, யாழ் மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் உள்ள நூற்றிற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் காலை 9.30 மணியளவில் ஓன்று கூடிய அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்த மாதங்களில் இடம் பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கு இன்னமும் புள்ளிகள் அறிவிக்கப்படாத நிலையில் அரசாங்கத்தினால் வேலையற்ற பட்டதாரிகளுக்கான அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலயே இன்று பட்டதாரிகள் ஒன்றுகூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இன்றைய கலந்துரையாடல் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர்கள்,
இன்று காலை அரசாங்க அதிபரைச் சந்தித்து நியமன நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். நாடுமுழுவதிலும் 5 ஆயிரம் பட்டதாரிகள் எவ் அடிப்படையில் உள்வாங்கப்படவுள்ளனர் என தனக்கு தெரியது எனவும் 2 ஆம் கட்ட நேர்முகத் தேர்வின் பின் 15 ஆயிரம் பட்டாரிகள் பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் உள்வாங்கப்படவுள்ளதாக தமக்கு அரசாங்கத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டள்ளதாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் புள்ளி அடிப்படையில் இல்லாமல் வருடத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்க வேண்டும். முதல்கட்ட நியமனம் வழங்கவுள்ள 5 அயிரம் பேருக்கான நியமனமும் புள்ளிகள் அடிப்படையில் வழங்காது பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் வழங்கப்படவேண்டும்.
இது தொடர்பில் இரவு பகல் தொடர்ச்சியான போராட்டம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பில் பட்டதாரிகளினால் கலந்துரையாடப்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த விடயங்கள் தொடர்பில் மன்னார் மற்றும் வவுனியா பட்டதாரிகளும் அந்தந்த மாவட்டச் செயலங்களின் முன் ஒன்றுகூடி கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தனர்.