அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன் சந்திர தெரிவித்தார்.
இந்த புதிய நடைமுறைக்கு அமைய பட்டதாரிகள் அனைவரும் 2019ஆம் ஆண்டில் மூன்று கட்டங்களாக அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படுவர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை 35ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அரச வேலையில் பட்டதாரிகளை இணைப்பதற்கான வயதெல்லையை 45ஆக அதிகரிக்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கமைய வயதெல்லையை 45ஆக உயர்த்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
5 ஆயிரம் பட்டதாரிகள் அடுத்த மாதமும் 15 ஆயிரம் பட்டதாரிகள் வரும் செப்ரெம்பரிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான பயிற்சியாளர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
2019ஆம் ஆண்டில் மூன்று கட்டங்களில் பட்டதாரிகளை அரச சேவைகளில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போதே முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.