யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக ( Compitent Authority) மூத்த பேராசிரியர் க. கந்தசாமி நியமிக்கப்படுகின்றார். அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை வலுவற்றதாக ஆக்கப்படுகின்றது.
தகுதி வாய்ந்த அதிகாரி, துணைவேந்தருடைய அதிகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரமுடைய சபையான பேரவையின் அதிகாரங்களைக் கொண்டவாராக உள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (பதவிவழி உறுப்பினர்கள் 14 உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் 15) 29 உறுப்பினர்களைக் கொண்ட பேரவை வலுவற்றதாக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய பதவி நீக்கம் செய்யப்பட்டார். 45 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியின் தலையீட்டில் துணைவேந்தர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், முதன் முறையாக தகுதி வாய்ந்த அதிகாரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை துணைவேந்தர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முன்னர், அவரை பதவி விலகுமாறு கோரி அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதுதான் ஒழுக்கமானது என கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த இ.விக்கினேஸ்வரன் துணைவேந்தருக்கான தேர்தலில் மூன்றாம் இடத்தினைப் பெற்றபோதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சிபார்சின் பேரிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவிக்கு கொண்டுவரப்பட்டார்.
தற்போது அதே ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினாலேயே யாழ். பல்கலைக்கழக 45 வருட வரலாற்றில் முதல் முறையாக பதவி நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினையும் நல்லாட்சி அரசு எனக் கூறி ஜனாதிபதியாகக் கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.