வித்யா கொலை வழக்குடன் தொடர்புபட்ட வாக்குமூலம் ஒன்றினைப் பெறுவதற்காக சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
சபாநாயகரிடம் இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மன்றில் தெரிவித்தார்.
வித்யா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சுவிஸ்குமாரை பிடித்து வைத்திருந்த பொது மக்களிடமிருந்து அவரைக் காப்பாற்றி சிலர் கொழும்பிற்கு தப்பவைத்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சுவிஸ்குமாரை பொதுமக்கள் கட்டிவைத்திருந்போது சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவ்விடத்தில் நின்றதாகக் கூறப்படும் காணொளி ஆவணம் அண்மையில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் குறித்தே அமைச்சர் விஜயகலா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதனோடு தொடர்பட்டே குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
சுவிஸ் குமாரை் தப்பிச்செல்ல உதவியதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி லலித் ஜயசிங்க மீதான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றபோதே சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ள விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.