இலங்கையின் வடமேல் மாகாணத்தில் தங்கொட்டுவ, புஜ்ஜம்பொல பிரதேசத்தில் இன்று அதிகாலை எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வேன் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஐந்து சடலங்கள் தொடர்பில் காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
புஜ்ஜம்பொல-இரமெதகம வீதியில் கொஸ்ஹேன வத்த என்ற ஒதுக்குப்புறமான இடம் ஒன்றிலேயே எரிந்த நிலையில் இருந்த வேனிலிருந்து எரிந்துபோன இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அடையாளம் காணமுடியாதவாறு இந்த சடலங்கள் எரிந்துபோயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையின் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலை அடுத்தே, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
பின்னர், இரசாயன பகுப்பாய்வாய்வாளரும் மாஜிஸ்ட்ரேட் நீதிபதியும் சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்துள்ளனர்.
எரிந்த வேனிலிருந்து கூரிய கத்தி போன்ற ஆயுதம் ஒன்றும் மூன்று கைத்தொலைபேசிகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெரிவித்தார்.
1988-89ம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர் இந்தப் பிரதேசத்தில் இப்படியான ஒரு காட்சியை முதல் தடவையாக பார்ப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
அண்மைய நாட்களாக தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் வேறு குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், குற்றக் கும்பல்களை கைது செய்வதற்கும் நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை பணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.