முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை மே மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கு கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தில் அவர் அமைச்சராகப் பதவி வகித்தபோது சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்தாரென அவர் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கமையவே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னாள் அமைச்சர் வீரவன்ச 2009 ஜனவரி முதலாம் திகதி முதல் 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள் தனது சொத்துக்களை பிரகடனப்படுத்த தவறியிருப்பதாகவே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துப் பரிமாற்றம் தொடர்பிலான 39 சம்பவங்களின் கீழ் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 23(அ) பிரிவுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் 26 பணப்பரிமாற்றங்கள், வீடு நிர்மாணம், நிலம் மற்றும் வாகனக் கொள்வனவை முன்னெடுத்திருப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.