கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த 21 வயதுடைய என். டிலக்சன் எனும் மாணவனே பலியாகியுள்ளார். இன்று மாலை 4.30 மணியளவில் இரணைமடுவின் வான் கதவு நான்கு திறக்கப்பட்டிருந்து.
இதில் இடது பக்கம் இரண்டு கதவுகளும், வலது பக்கம் இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்குள் பெருமளவான பொது மக்கள் குழுமியிருந்தனர்.
இதில் சில இளைஞர்கள் குறித்த பகுதியின் ஆழமான பகுதிக்குள் இறங்கி குளித்துக்கொடிண்டிருந்தனர். இதன் போது யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியிலிருந்து ஜந்து பேருடன் இரணைமடுவை பார்க்க வந்திருந்த இளைஞர் ஒருவர்
குளிப்பதற்கு இறங்கிய போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் அவருடன் வருகை தந்த நண்பர்கள் அழுதவாறு காணப்பட சம்வத்தை அந்த இடத்தில் நின்ற ஊடகவியலாளர்கள் அவதானித்து உடனடியாக கிளிநொச்சி பிரதி பொலீஸ் மா அதிபர், கிளிநொச்சி படைகளின் தலைமையகம், போன்றோருக்கு அறிவித்தனர். எனினும் மீட்புப் பணியாளர்களின் வருகை தாமதமடைந்தது. சுமார் முப்பது நிமிடங்களுக்கு பின்னரே பொலீஸ் மற்றும் படையினர் வருகை தந்தனர்.
இதற்கிடையில் ஒரு பகுதியில் திறக்கப்பட்டிருந்த வான்கதவுகள் மூடப்பட்டு சில இளைஞர்கள் நீரில் இறங்கி தேடுதலை மேற்கொண்டு ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் உடலை மீட்டனர்.
இரணைமடுகுளம் அபிவிருத்திக்கு பின் கடந்த வெள்ளிகிழமை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.