யாழ்.பல்கலைகழகத்தை புத்த பெருமான் ஆக்கிரமித்தமையால் தமிழர்களின் தொன்மைகளை சான்று பகிரும் பொருட்கள் நூதன சாலைக்குள் முடங்கியதாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் சிலர் தெரிவித்து உள்ளனர்.
யாழ்.பல்கலைகழக வரலாற்றுதுறையின் தொல்லியல் பிரிவும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து வடஇலங்கையின் கலாசார மரபுரிமையை பாதுகாப்பதற்கான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் யாழ்.பல்கலைகழகத்திற்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டு இருந்தார்.
கல்வி அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு பல்கலைகழகத்தில் மரபுரிமைகள் தொல்லியல்களை சான்று பகிரும் விதமாக கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த கண்காட்சியினை ஒழுங்கு படுத்துவதற்காக கொழும்பு பல்கலைகழகத்தின் உதவியினை யாழ்.பல்கலைகழகத்தினர் நாட்டியுள்ளனர்.
அதனை அடுத்து கொழும்பு பல்கலைகழகத்தினால் பௌத்த மதத்தின் மரபுரிமைகள் தொன்மைகளை சான்று பகிரும் விதமாகவும் , தொன்மையான புத்த பெருமானின் சிலைகளும் யாழ்.பல்கலைகழகத்திற்கு கொண்டு வரப்பட்டு காட்சி படுத்தப்பட்டன.
அதன் போது யாழ்.பல்கலைகழகத்தில் தமிழ் மக்களின் மரபுரிமைகளை தொன்மைகளை சான்று பகிரும் பொருட்கள் அனைத்தும் வரலாற்று துறையின் நூதன சாலையினுள் பூட்டி வைக்கப்பட்டு இருந்ததாக மாணவர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
யாழ்.பல்கலைகழகத்தில் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான தொடக்க நிகழ்வில் தமிழர்களின் மரபுரிமை சின்னங்கள் மற்றும் பொருட்களை காட்சிப்படுத்தாமல் இருட்டடிப்பு செய்யபட்டது ஏன் எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அனைத்து மதம் சார்ந்த சின்னங்களையும் சமனாக பகிருங்கள்.
யாழ்.கோட்டையில் மத்திய கலாச்சார நிலையத்தினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
குறித்த நிலையத்திலும் பௌத்த மத சின்னங்கள் மற்றும் பௌத்த மத மரபுரிமைகளை சான்று பகிரும் பொருட்களே அதிகளவில் காட்சி படுத்தப்பட்டு இருந்தன.
அவற்றினை அவதானித்த கல்வி அமைச்சர் நான் பௌத்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அனைத்து மதத்தினையும் மதிப்பவன் எனவே அனைத்து மதம் சார்ந்த சின்னங்களையும் சமனாக பகிர வேண்டும் என சம்பந்தபட்டவர்களுக்கு கடுமையான தொனியில் கூறினார். என்பது குறிப்பிடத்தக்கது.