முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து கூட்டாக முன்னெடுக்க யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகம் முன்வந்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் சந்திப்பொன்றை நடத்த அவர்கள் பகிரங்கமாக ஊடககங்களின் ஊடாக முன்வைத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நாளை சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அவர்களை சந்திக்க முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்வந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலை பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதற்கான அனுமதி பல்கலைக்கழகத்தால் மறுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து திருநெல்வேலியிலுள்ள விருந்தினர் தங்ககம் ஒன்றில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இன்று (11) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின் பின்னராக ஊடகங்களிடையே மாணவ பிரதிநிதிகள் பேசியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை முன்னெடுப்பது தொடர்பான மக்களது உணர்வுகளிற்கு மதிப்பளித்து அதனை கூட்டாக முன்னெடுப்பது தொடர்பில் முதலமைச்சருடன் சந்திப்பொன்றை நடத்த விரும்புவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். அத்துடன் இதற்கான நேரமொன்றை ஒதுக்கித்தருமாறு அவர்கள் பகிரங்கமாக ஊடககங்களின் ஊடாக கோரிக்கையொன்றினையும் முன்வைத்திருந்தனர்.
அவர்களது கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நாளை சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அவர்களை சந்திக்க முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்வந்துள்ளார்.
இச்சந்திப்பில் மதத்தலைவர்களும் பங்கெடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.