எம்.கே.சிவாஜிலிங்கமும், மஹிந்தவும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் எதிர் எதிராக போட்டியிடும் நிலையினில் இன்று ஊடகவியலாளர்களை சிவாஜிலிங்கம் சந்தித்தார்.
யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் ஊரில் ஒரு பழமொழி உண்டு.பன்றிகளிற்கு எப்போதும் ஏதோ தின்பது போன்று கனவு வருமாம்.அதே போல முன்னாள் அமைச்சர் டக்ளஸிற்கும் பணம் பின்கதவால் பெறுவது பற்றிய கனவே வந்து தொலைத்துவிடுகின்றது.
அதன் தொடர்ச்சியாகவே 2010 ம் ஆண்டைய ஜனாதிபதி தேர்தலின் போது என்னை மஹிந்தவிடம் பணம் பெற்றமை தொடர்பாக கருத்துக்களினை வெளியிட்டு வருகின்றார்.
போர்க்குற்றவாளிகளான மஹிந்த மற்றும் சரத்பொன்சேகா ஆகியோரை தண்டிக்க வலியுறுத்தியே நான் அப்போது தேர்தலினில் குதித்திருந்தேன்.கூட்டமைப்பு போர்க்குற்றவாளியான சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதை எதிர்த்தே நான் போட்டியிட களமிறங்கினேன்.
எனது தனிப்பட்ட வாழ்வு பற்றி மக்களிற்கும் ஏன் என்னுடன் நெருங்கி பழகும் பத்திரிகையாளர்களிற்கு தெரியும்.குருநாகலில் வேட்பு மனுதாக்கல் செய்ய சாதாரண பேரூந்தினிலேயே சென்று வந்தேன்.
எனக்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டுமென தேர்தல் ஆணையாளரிடம் கூறப்பட்டுள்ளதாம். நான் பிரச்சாரங்களிற்காக அங்கு செல்லப்போவதில்லை.எதிர்பை வெளிப்படுத்தவே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தேன்.
மாகாணசபை உறுப்பினர் என்ற வகையினில் வழங்கப்பட்ட காவல் துறை பாதுகாப்பினையே நான் நிராகரித்துள்ளேன் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Home / செய்திகள் / மஹிந்தவிற்கும் மைத்திரிக்கும் எதிர்ப்பை வெளியிடவே வேட்புமனு தாக்கல் செய்தேன் – கே.சிவாஜிலிங்கம்:-