புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் பொலிசாரின் பிடியில் இருந்து கொழும்பிற்கு தப்பிச் சென்றது எப்படி? தப்பிச் செல்வதற்கு உதவியவர்கள் யார்?, அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் யார்? போன்ற விபரங்களை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு ஊர்காவற் துறை நீதவான் உத்தரவு இட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை இன்றைய தினம் (09) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு யாழ்.பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பது மூடு மந்திரமாக மர்மமாக உள்ளது எனவே அது தொடர்பில் பொலிசாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றில் சட்டத்தரணி க.சுகாஷ் விண்ணப்பம் செய்தார்.
அதன் பிரகாரம் நீதவான் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு ,
ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் எவ்வாறு கைது செய்யப்பட்டார் ? அல்லது தானாக சரணடைந்தாரா ? அல்லது வேறு நபர்களால் பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டாரா ?
அவ்வாறு வேறு நபர்களால் பாரப்படுத்தப்பட்டு இருந்தால் , அவர்களின் பெயர் விபரம் , அந்த நபர்களுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான தொடர்பு , அந்த நபர்களுக்கும் இந்த வழக்குக்குமான தொடர்பு ,
கொழும்பில் வைத்து எவ்வாறு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் ? கொழும்பு செல்வதற்கு உதவியவர்களின் பெயர் , விபரம் , குறித்த சந்தேக நபர் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஏதேனும் சட்ட ரீதியான குறிப்புக்கள் பேனப்பட்டனவா ? ஏதேனும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டாரா ?
கொழும்பு சென்றது சாதாரண பொதுமகனாகவா ? பொலிஸ் பாதுகாப்பிலையா ? சாதாரண பொதுமகனாக சென்று இருந்தால் எவ்வாறு பொலிசார் விடுதலை செய்தார்கள் ? , அவ்வாறு விடுதலை செய்யப்பட்டு இருந்தால் யாரால் எந்த சட்ட ஏற்பாட்டின் கீழ் விடுதலை செய்யப்பட்டார் ?
குறித்த சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற கால கட்டத்தில் எத்தனை கையடக்க தொலைபேசிகள் பாவித்தார் போன்ற தகவல்கள் பெறப்பட்டனவா ? சம்பவ தினத்திற்கு ஒரு கிழமைக்கு முன்னரும், பின்னரும் யார் யாருடன் தொடர்புகளை பேணினார் ,
தொலைத்தொடர்பு , தொடர்பு குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா ? குறித்த தொலை தொடர்பு நிறுவனத்தில் இருந்து ஒலிப்பதிவு பிரதிகள் எவையும் பெறப்பட்டனவா ?
இது தொடர்பில் போலீசாரோ அல்லது புலனாய்வு பிரிவோ முன்னதாக ஏதேனும் புலன்விசாரணை மேற்கொண்டார்களா ? அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் அது தொடர்பான நடவடிக்கை என்ன ?
போன்றவை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு நீதவான் உத்தரவு இட்டார்