வழித்தட அனுமதியின்றி பயணித்த சொகுசுப் பேருது ஒன்றினை சாவகச்சேரி பொலிஸார் மடக்கிப்பிடித்தவேளை, அதனைப் படம் பிடித்த ஊடகவியலாளர் குறித்த பேருந்தின் உரிமையாளரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் , படம் பிடித்த கையடக்கத் தொலைபேசியைப் பறித்து படங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச் சம்பவம் நடைபெற்றவேளை அங்கிருந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொலிஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18.04.2017 இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
யாழ் நகரில் ஐரோப்பிய நாடு ஒன்றின் பெயரினைக் கொண்டு வைத்தியசாலை வீதியில் இயங்கிவரும் ஹோட்டல் ஒன்றிற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே வழித்தட அனுமதியின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது சாவகச்சேரி பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனைப் படம் பிடித்த சுயாதீன ஊடகவியலாளரின் கையடக்க்கத் தொலைபேசியை பறித்த பேருந்தின் உரிமையாளர் அனைத்துப் படங்களையும் அழித்துள்ளதுடன் அச்சுறுத்தியுள்ளார். இதனைச் சாவகச்சேரி நிலையப் பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துதுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஊடகவியலாளர்கள் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.