துறைமுக அபிவிருத்தி எனும் பெயரில் பருத்தித்துறை துறைமுகப்பகுதியை அண்டிய கிராமங்களை கையகப்படுத்தும் இரகசியத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆசீர்வதத்ததுடன் முன்னெடுக்கப்படவிருக்கும் இச் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (29) காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்போவதாக பருத்தித்தித்துறை மக்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமங்களை ஆக்கிரமிப்பதற்கு எதிராக அவர்கள் பிரதேச செயலரிடம் மகஜர்களையும் கையளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பருத்தித்துறை துறைமுகத்தை உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் சுமார் 700கோடி நிதி ஒதுக்கீட்டினில் புனரமைக்கப்போவதாக அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது.
அவ்வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சகிதம் பருத்தித்துறை துறைமுகப்பகுதிக்கு விஜயம் செய்ததுடன் கள நிலவரத்தை பார்வையிட்டு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் குறித்த துறைமுக விஸ்தரிப்பிற்கென துறைமுகத்தை அண்மித்துள்ள கிராமமான கொட்டடி முழுமையாகவும் அதற்காக அருகாக மற்றொரு கிராமமாக முனைப்பகுதியின் அரைவாசியினையும் சுவீகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமது கிராமம் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால் இம்முயற்சிகளிற்கு தோள் கொடுக்கும் தமிழரசுக்கட்சித் தரப்பு பதில் கூறவேண்டுமென மக்கள் தரப்பில் குரல் எழுப்பப்படுகின்றது.
1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினர் வசம் வீழ்ந்த போது பருத்தித்துறை துறைமுகமும் இராணுவ பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு 524 பிரிகேட் படைத்தளமாக்கப்பட்டது. அவ்வாறு துறைமுகப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட போது அருகாக உள்ள கிராமங்களான கொட்டடி மற்றும் முனை என்பவையும் ஆக்கிரமிக்கப்பட்டதுடன் மக்களும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.தற்போது நீண்ட இடைவெளியின் பின்னர் இப்பகுதிகள் விடுவிக்கப்பட்டதையடுத்து மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள நிலையினில் மீண்டும் நிரந்தரமாக பருத்தித்துறை துறைமுகப்பணிகளிற்கென காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை அம்மக்களிடையே அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது.