படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.
யாழ் ஊடக மையம் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி ஊடக அமைப்புக்களின் அனுசரணையுடன் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
முன்னதாக, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தூணுக்கு மலர்மாலை சாத்தி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் மட்டுமன்றி, தென்பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.