இலங்கைத் தீவில் கார்த்திகைப் பூங்கள் வேண்டப்படாத ஒன்றாகவே பார்க்கப்பட்டுவருகின்றன. காத்திகை மாதத்தில் மட்டும் பூத்துக் குலுங்குவதால்தான் காந்தள் மலர்கள் கார்த்திகைப் பூக்கள் ஆகின. காந்தள் மலர்களும் செடிகளும் ஆட்களைக் கொல்லும் விசம் செறிந்தவை. விடுதலைப் புலிகள் தங்களின் உயிர்நீர்த்த மாவீரர்களை காந்தள் பூக்கள் பூத்துக்குலுங்கும் கார்த்திகை மாதத்தில்தான் நினைவுகூருகின்றனர். அவர்கள் கழுத்தில் சயனைற் எனும் விசக்குப்பிகளை எந்நேரமும் சுமந்திருப்பர். காந்தள் பூக்களிற்கும் புலிகளிற்குமான நெருக்கம் இவற்றிலிருந்துதான் தொடங்குகின்றது. அதனால் தான் காந்தள் பூக்களை கார்த்திகைப் பூக்களாக மாவீரர் கல்லறைகளில் தூவி மாவீரர்களை நினைவுகூருகின்றனர்.
அதனால்தான் கார்த்திகைப் பூக்கள் இலங்கை அரசாங்கத்திற்கோ படைத்தரப்பினருக்கோ வேண்டப்படாத ஒன்றாகிவிட்டன. கார்த்திகைப் பூக்களை கைகளில் ஏந்தி படம் எடுத்தவர்களை படையினர் கைதுசெய்த வரலாறுகள் கூட உள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளிற்கு அனுமதியளித்த அரசாங்கம் கூட தமிழ் அரசியற் தரப்பினருக்கு புலிக் கொடியோடு கார்த்திகைப் பூக்களையும் நினைவுகூரலின்போது பயன்படுத்தவேண்டாம் என்று உத்தரவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
ஆனால் கச்சத்தீவில் கண்பார்க்கும் திசைஎங்கும் கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. கார்திகைப் பூங்களால் அந்தோனியார் அர்ச்சிக்கப்படுகின்றார். அந்தோனியார் ஆலயத்தைக் கட்டுவித்த இலங்கை கடற்படையினர் ஆலய உச்சியில் சிலுவை சுருவத்தின் இருமருங்கும் பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூங்களை செதுக்கியிருக்கிறார்கள்.
கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தை திறந்துவைத்து உரையாற்றிய யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராசம் கச்சத்தீவை இலங்கை தமிழ் மக்களும் இந்திய தமிழ் மக்களும் இலங்கை சிங்கள மக்களும் ஒன்றாய் கூடி வழிபாடியற்றும் புனிதத் தலமாக அமைதியின் அடையள சின்னமாக பேண வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
எல்லாமக்களும் இறை அருள் வேண்டி ஒன்றாய் சங்கமிக்கும் கச்சத்தீவில் கார்த்திகைப் பூக்களும் தடையின்றி பூர்த்துக் குலுங்குகின்றன.
காந்தள் அழிக்கவும் முடியாத மலர். கச்சதீவை கார்த்திகை தீவு என்றே அழைக்கலாம். அருமையான பதிவு.