உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் அமரர் தராகி சிவராம் 11ம் ஆண்டு நினைவு நாளும் 29ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. பிற்பகல் 03.15 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள, மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியினில் படுகொலையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கான நினைவு சுடரேற்றலும் மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.
தொடர்ந்து பொதுநூலக மண்டபத்தில் நினைவு உரைகள் மற்றும் உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தல் உத்தியோகபூர்வ அறிவிப்பு என்பவை நிகழ்த்தப்பட்டதோடு 2007 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக நிலக்சனின் நண்பர்களால் உருவாக்கப்பட்ட நிதியம் மூலம் போரின்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளரின் இரு குடும்பங்களின் பிள்ளைகளிற்கான கல்வி ஊக்குவிப்பு நிதி நிலக்சனின் பெற்றோர்களால் கையளிக்கப்பட்டது.
நினைவுரைகளை கலாநிதி சி.ரகுராம், ஊடக சுதந்திரத்துக்காக செயற்பாட்டுக் குழுவின் தலைவரும் லேக் கவுஸ் நிறுவன ஆசிரியர் பீடப் பிரதானியுமான சமன் வகாராய்ச்சி, அரசியல் ஆய்வாளரும் விமர்சகருமான நிலாந்தன் பாசன, சந்தேசிய பண்டார, அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம், சிவராமின் நண்பர் தவச்செல்வன் ஆகியோர் ஆற்றினர்.