யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்குச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகளை விநியோகிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று திங்கட்கிழமை (14.11.2016) திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விதை உருளைக்கிழங்குகளை வழங்கி உருளைக்கிழங்கு விநியோகத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் இம்முறை 835 விவசாயிகள் ஏறத்தாழ 210 ஏக்கர் பரப்பளவில் உருளைக்கிழங்குச் செய்கையை மேற்கொள்ள உள்ளனர். இவர்களுக்கு சசி, றெட்லசோடா, அனோவா ஆகிய மூன்று ரக உருளைக்கிழங்குகள் மொத்தம் 167 மெற்றிக் தொன்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றில் முதற்கட்டமாக தற்போது 325 விவசாயிகளுக்கு தலா 200 கிலோ எடையுள்ள பிரான்சில் இருந்து தருவிக்கப்பட்ட சசி ரக உருளைக்கிழங்குகள் வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய விவசாயிகளுக்கு விரைவில் றெட்லசோடா, அனோவா ரக விதை உருளைக்கிழங்குகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் றெட்லசோடா ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் அர்னோவா நெதர்லாந்தில் இருந்தும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகளை வழங்குவதற்கென மத்திய அரசின் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் 22.4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விதை கிழங்குகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் ஊடாகக் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கும் விதை உருளைக்கிழங்குகள் வழங்கி வைக்கப்பட உள்ளன.
விதை உருளைக்கிழங்குகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கநாதன், உருளைக்கிழங்கு விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் இ.தெய்வேந்திரம், யாழ் மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபைத் தலைவர் க.தியாகலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.