ரிஷாத் பதிதியூன் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தபோதே புனர்வாழ்வு முகாம்களில் பலர் காணாமல் போயுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணிமுன் சாட்சியமளித்துள்ள சிவமனோகரி செல்லத்துரை என்பவர் தமிழ் மக்களின் பிரச்சனைக்களை தீர்க்க தமிழர்களுடன் பேச வேண்டும் முஸ்லீம் மக்களின் பிரச்சனையை தீர்க்க முஸ்லீம் மக்களுடன் பேச வேண்டும். தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் முஸ்லீம் களுடன் பேசி பயனில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க பொறிமுறைக்காக மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வு சனிக்கிழமை (06) காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
தாஜூதினின் வழக்கு விசாரணைகளுக்காக தேடி தேடி சாட்சி ஆதாரங்களை திரட்டுபவர்கள். ஏன் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட எந்த ஒரு குற்றத்திற்காகவும் இவ்வாறு செயல்படவில்லை. இலங்கையில் நீதித்துறையில் கூட அரசியல் செல்வாக்கு செலுத்து கின்றது. நீதிபதிகளின் நியமனங்களின் போது கூட அரசியல்வாதிகளின் செல்வாக்கு பயன்படுத்த படுகின்றது. இவ்வாறன நிலையில் எவ்வாறு நீதித்துறை சுதந்திரமாக இயங்கும் என நம்ப முடியும். எனவே சர்வதேச விசாரணையே தேவை என மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் முஸ்லீம் இளைஞர்கள் சிலரினால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டன. அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இந்த நல்லிணக்க அரசாங்கம் தயாரா ? இந்து ஆலயம் இடித்தழிக்கப்பட்டு மாட்டிறைச்சி கடை கட்டப்பட்டு உள்ளது. இடித்தழிக்கப்பட்ட ஆலயங்களை மீள் நிர்மாணம் செய்ய அரசாங்கம் தயாரா ? எனக் கேள்வி எழுப்பிய அவர்
நஷ்ட ஈடு தொடர்பில் கதைக்கின்றார்கள். யுத்த காலத்தில் வடக்கில் பொருளாதார தடை விதிச்சார்கள். அதனால் ஒரு பனடோல் 60 ரூபாய்க்கு வாங்கினோம். இவ்வாறு பல பொருட்களை அதிகரித்த விலைக்கு வாங்கினோம் அதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானோம். அதற்காக இந்த அரசாங்கம் யுத்த காலத்தில் வடக்கில் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமா? என்றும் தெரிவித்துள்ளார்.