தமிழக சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டது குறித்து, ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து முறையிட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டு, பனியனுடன் வெளியேற்றப்பட்டார். அதே தோற்றத்துடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முறையிடச் சென்றார். ஆனால், ஆளுநர் மாளிகையில் திமுகவினருக்கு, அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தானும் திமுகவினரும் தாக்கப்பட்டதாக முறையிட்டார். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படியும், அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே மு.க.ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதத்தில் கனிமொழி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாலை 5 மணி அளவில் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.கள் கைது செய்யப்பட்டனர்