பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக முன்வைக்கப்படவுள்ள புதிய சட்டம் பழைய வைனை புதிய கோப்பையில் இட்டு வழங்குவது போலாகிவிடக் கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அச்சம் வௌியிட்டுள்ளது.
சட்ட ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய சட்டம், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது என, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது தொடர்பாக, பாதுகாப்புத் துறையிடம் ஆலோசனை நடத்திய அரசாங்கம், சட்ட ஆணையத்தின் ஆலோசனைகளை நிராகரித்துவிட்டது என தான் கேள்வியுற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் கடந்த 4ம் திகதி தான் கேள்வி எழுப்பிய போதும், நீதி அமைச்சரோ அல்லது ஏனைய அமைச்சர்களோ இதற்கு எந்தவித பதிலையும் வழங்கவில்லை எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய சட்டம், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மீறினால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து அரசாங்கத்திற்கு சலுகைகள் கிடைக்காமல் போகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திலுள்ள, கால வரம்பின்றி ஒருவரை தடுப்புக் காவலில் வைத்தல் மற்றும் முதல்முறையாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அளிக்கும் தகவலையே ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக் கொள்ள முடியும் போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகள், புதிய சட்டத்திலும் இடம்பெறக் கூடும் என, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.