(23.09.2015) எமக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுங்கள் அல்லது எப்போது வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கூறுங்கள் என்கேட்டு வேலையில்லா பட்டதாரிகள் வடமாகாணசபை முன்பாக இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இன்றைய தினம் வடமாகாணசபையின் 35 வது அமர்வு நேற்றையதினம் (22) நடைபெற்ற நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தை பட்டதாரிகள் முன்னெடுத்திருந்தனர்.
வடமாகாணசபையின் வாயில் கதவுகளை மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை பட்டதாரிகள் முன்னெடுத்தனர்.
இதனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மாகாணசபைக்குள் செல்ல முடியாத நிலை உருவானது.
இந்நிலையில் தம்மால் முடிந்தவற்றை தாம் செய்வதாகவும் தாம் பட்டதாரிகளை மறக்கவில்லை எனவும் தெரிவித்த முதலமைச்சர் தமக்கும் தடைகள், நெருக்கு வாரங்கள் உள்ளதாகவும் தம்மால் முடிந்தளவு தொடர்ந்தும் செய்கிறோம் எனவும் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
காலங்காலமாக இதைத்தானே கூறுகின்றீர்கள் உறுதியான முடிவு கிடைக்கும்வரை தொடர்ந்து போராட்ப்போவதாகத் தெரிவித்த பட்டதாரிகள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் இரண்டாவது தடவையாக வடமாகாண சபையினர் பட்டதாரிகளை அழைத்துப் பேசியிருந்தனர். இதன்போது இரு பகுதியினருக்குமிடையில் கடுமையான வாய் தர்க்கம் இடம்பெற்று ஒரு வாறாக செயலணி ஒன்றை உருவாக்க உடன்பாடு காணப்பட்டுள்ளது.இதற்கிடையில் மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புமாறு மத்திய அரசை கோரும் பிரேரணை சபையில் மாகாண மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
15 பட்டதாரிகள் மற்றும் 7 மாகாணசபை உறுப்பினர்கள் கொண்ட செயலணி உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாணசபை ஆளுகைக்குட்பட்ட வெற்றிடங்களை நிரப்புமாறு பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.