தமிழ் மக்களான நாம் பின்னடைவானதும் பலவீனமானதுமான நிலையில் உள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
புளொட் அமைப்பின் 31வது வீரமக்கள் தினம் நேற்று(வியாழக்கிழமை) வவுனியா கோவில்குளத்தில் உள்ள உமாமகேஸ்வரன் நினைவு தூபி வளாகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமது இன்னுயிரையீன்ற தலைவர்களையும் பொதுமக்களையும் தோழர்களையும் நினைவுபடுத்துகின்றோம் என்றால் அவர்களது கனவுகள் நனவாகும் வரை அவர்களுடைய பாதையில் சென்று அக்கனவுகளை நிறைவேற்றவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த நினைவேந்தல்கள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றது.
இன்று தமிழ் மக்களை பொறுத்த வரையிலே மிகவும் பலவீனமானதும் பின்னடைவானதுமான நிலையில் இருந்து கொண்டு இருக்கிறோம். முதலில் சாத்வீக போராட்டமாக பின்னர் ஆயுத போராட்டமாக பல குழுக்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் ஆயுத ரீதியாகவும் ஒரு பலம்பொருந்திய அமைப்பாக இருந்தது.
பின்னர் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு மீண்டும் சாத்வீக ரீதியான போராட்டம், ஜனநாயக ரீதியான போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவைகள் மூலம் தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கும் தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சனைக்கும் ஒரு நியாயமான தீர்வை பெறமுடியுமா என்ற ஏக்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மிகப்பெரிய ஆதரவை அரசுக்கு வழங்கியது.
யுத்தம் முடிவடைந்து 2010 தொடக்கம் இன்று வரை பத்து வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை மூலம் ஒரு நியாயமான தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளிலே இருக்கின்றது.
2010 தொடக்கம் 2015 வரை மகிந்த ராஜபக்ஷவின் அரசு இருந்த காலப்பகுதியிலே பெரிதாக எதையும் செய்து விட முடியாத நிலையிருந்தது. ஏனென்றால் எந்தவிதமான நியாயமான தீர்வுக்கு செல்வதற்கு அப்போதும் இருக்கவில்லை தற்போதும் இருக்கவில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.