இந்த நாட்டில் சட்டபூர்வமாக அனுமதி பெற்று மதுவை விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிகமான வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் மாவட்டங்களை முதலாம், இரண்டாம், மூன்றாம் என வரிசைப்படுத்தி எனக்கு கூற முடியும். அந்தவகையில் முதலாம் இடத்தில் யாழ்ப்பாணமும், இரண்டாம் இடத்தில் நுவரெலியா மாவட்டமும், மூன்றாம் இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் எதிர் காலம் நலன் கருதி ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளின் ஏற்பாட்டில் மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாக மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டமொன்று 26.06.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாமிடத்திலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் வருடத்திற்கு 1600 கோடி ரூபாவை மதுவுக்காகவும், புகைத்தலுக்காவும் அங்குள்ள மக்கள் செலவு செய்வதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி எனவே இந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுப்படுவதற்கு சிந்திக்க வேண்டியதோடு அணைவரும் ஒன்றுப்பட்டு செயல்பட்டு இவ்விடத்திலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில், 2009ஆம் ஆண்டோடு ஒப்பிட்டால், பியர் மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகப் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு 7 லட்சத்து 62 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான அளவு பியர் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2013ஆம் ஆண்டில் 40 கோடியே 57 லட்சம் லிட்டர் பியர் விற்பனையாகியிருக்கின்றது. அதேபோல, 2009ஆம் ஆண்டு 65 லட்சத்து 98 ஆயிரம் லிட்டர் வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது 2013ஆம் ஆண்டில் 6 கோடியே 11 லட்சத்து 32 ஆயிரம் லிட்டராக அதிகரித்திருக்கின்றது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலேயே நகரப்பகுதிகள் எங்கும் பல இடங்களிலும் மது விற்பனை நிலையங்கள், மது அருந்தும் இடங்களுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தென் மாகாணத்தில் பாடசாலை வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிக அளவில் மது அருந்தப்படுவதாகவும் இதனால், மதுபான விற்பனையின் மூலம் அங்கிருந்து அதிக அளவிலான வரிப்பணம் அரசாங்கத்திற்கு செலுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.