அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ளது சாகஸ் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதான மாணவன், தனது பிறந்த நாளன்று சக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 மாணவர்கள் உயிரிழந்திருந்தனர். அத்துடன் மூவர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன், தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அம்மாநில பொலிஸார் தெரிவிக்கையில், “துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவக் நதானியேல் சக மாணவர்களுடன் இயல்பாகவே பழகினார். அவர் தனிமையை விரும்பவில்லை. அவர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் பங்கேற்றார். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததால் தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், குறித்த மாணவன் இறக்கும்போது அவரது தாயார் உடனிருந்தார்” என்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த மாணவனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.