வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு அடித்த கதையாக முடிந்திருக்கிறது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்ததினக் கொண்டாட்ட நிகழ்வுகள்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரை எல்லோரும் யாழ். எம்.ஜி.ஆர் என்றுதான் அழைப்பார்கள். எம்.ஜி.ஆர் மீது அளவுகடந்த மதிப்பும் பற்றுதலும் கொண்டாவர்தான் இந்த சுந்தரலிங்கம். எம்.ஜி.ஆர் போல நடை உடை பாவனை செய்யும் இவர் சிலமுறை எம்.ஜி.ஆர் ஐச் சந்தித்தும் இருக்கிறார்.
சுந்தரலிங்கம் மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் பல்வேறு மக்கள் எம்.ஜி.ஆரை கடவுள்போல வீடுகளில் படம்வைத்து பூஜித்துவருகிறார்கள். ஒருகாலத்தில் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல இந்தியத் தலைவர்களது படங்கள் இல்லாத பொது மண்டபங்கள் சனசமூக நிலையங்கள் ஏன் வீடுகள் கூட யாழ்ப்பாணத்தில் இல்லை என்றுதான் கூறவேண்டும். மகாத்மா காந்தி, இந்திராகாந்தி, காமராஜர், எம்.ஜி.ஆர் என இந்தியத் தலைவர்களது படங்களை சுவர்களில் தொங்கவிட்டிருப்பார்கள். எல்லாம் இந்திய அமைதிப்படையின் வருகையும் அதற்குப் பின்னான அவர்களது அட்டூழியங்களோடும் முற்றுப்பொற்றுவிட்டது.
ஆனாலும் எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் தோட்டம் செய்தும் சுருட்டுச் சுற்றியும் உழைத்த தனது சொந்தக் காசில் அவரிற்குச் சிலை வைத்திருக்கும் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆரின் நினைவுநாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகளை குறித்த சிலைக்கு மாலை அணிவித்து வருடந்தோறும் அனுஸ்டித்துவருவதோடு மக்கள் சிலருக்கு உதவிப் பொருட்களும் காலங்காலமாக அத்தினங்களில் வழங்கிவந்திருக்கிறார். இந் நிகழ்வுகளில் அவரோடு கல்வியங்காட்டினைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிலரும் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் கலந்துகொள்வார்கள்.
இவ்வருடம் எம்.ஜி.ஆரிற்கு நூறாவது பிறந்தநாள். தலைவரின் பிறந்தநாளை இவ்வருடம் பெரிதாக் கொண்டவேண்டும் என எண்ணிக்கொண்ட சுந்தரலிங்கம் வைத்திருந்த பணத்தில் வறியவர்களிற்கு வழங்க பொருட்களும் வாங்கிவைத்துவிட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தெரிந்தவர்களிற்கும் தகவல் வழங்கியிருக்கிறார். அதுதான் அவரிற்கு வினையாகவும் மாறியிருக்கக்கூடும்.
அரசியல் அற்று ஆர்ப்பாட்டம் அற்று அமைதியாய் கொண்டாடப்பட்டுவந்த எம்.ஜி.ஆர் நினைவுதினம் அரசியல் சாக்கடைக்குள் சிக்கிவிடப்போகிறதே என்று சுந்தரலிங்கம் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
எம்.ஜி.ஆர் தின நிகழ்வினை சுந்தரலிங்கத்தின் கைகளில் இருந்து தமது கைகளுக்குள் பிடுங்கிக்கொண்ட சில அரசியல்வாதிகள் இந்தியத் துணைத்தூதுவர் நடராஜனை பிரதம விருந்தினராக அழைத்துவந்து சுந்தரலிங்கம் வாங்கிவைத்திருந்த பொருட்களை நடராஜன் கைகளால் வழங்கச் செய்து தங்கள் இந்தியாவின் செல்லப்பிள்ளைகள் என்ற அரசியல் விசுவாசத்தை காட்டி முடித்திருக்கிறார்கள்.
பாவம் சுந்தரலிங்கம் ஐயா, எம்.ஜி.ஆரிற்கு ஒரு மாலை மட்டும் அணிவித்துவிட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். சுந்தரலிங்கம் ஐயாவின் கம்பீரக் குரலில் பாடலையும் அவரது சிற்றுரையையும் கேட்க முடியாது ஏமாற்றத்துடன் சென்ற அவரது நண்பர்கள் உவங்கள் அரசியல் நடத்துறதெண்டால் ஏதேனும் மண்டபத்தில நடத்தியிருக்கலாம் தானே என முணுமுணுத்தவாறு சென்றனர்.
கடந்த ஆண்டுகளில் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் தினைவுதினம் மற்றும் பிறந்தநாள் நிகழ்வு படங்கள்