“தமிழர் திருநாளில்” வாகீசத்தின் ஊடாக வாசக நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இற்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் தனியொரு கிராமத்தின் செய்திகளை புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அறியப்பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட செய்தித்தளம் தான் “வாகீசம்”.
இன்று பல மாற்றங்களைக் கடந்து, படிப்படியான வளர்ச்சியினூடாக புதிய பரிணாமத்தைத் தொட்டு நிற்கிறது.
தற்போது இலங்கைத் திருநாட்டை தளமாகக் கொண்டு தாயக மற்றும் வெளியுலகச் செய்திகளை நேரடியாகப் பெற்று வெளியிடும் முன்னணித் தளங்களிலொன்றாக வாகீசம் விளங்குகிற அதேவேளை ஊடக நெறிமுறைகளிற்கு உட்பட்டு அரச பதிவு பெற்ற இணையமாக இத் தைத்திருநாள் தினத்தில் இருந்து யாழ் மணைத் தளமாகக் கொண்டு இயங்கவிருக்கிறது என்கின்ற மகிழ்வான செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
கடந்த காலங்களில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது போலவே “வாகீசமும்” பலவிதமான அழுத்தங்களையும், இடர்களையும் எதிர்கொண்டது. ஒரு கட்டத்தில் இனந்தெரியாத விஷமிகளின் தளமுடக்கலுக்கும் உள்ளானது.
பின்னர் “பீனிக்ஸ்” பறவையைப் போல அதிலிருந்து மீண்டெழுந்து மக்களுக்கு தொடர்ச்சியாக செய்திகளை வழங்கி வருகிறது.
“வாகீசம்” ஏனைய தளங்களைப் போலல்லாது எமது மண்ணின் மகத்துவத்தையும், முன்னோர்களால் கட்டிக்காக்கப்பெற்ற கலை கலாசாரங்களையும் அழிந்துபோகவிடாமல் மேலும் வளர்த்தெடுக்க அரும்பாடுபடும்.
வாசக நெஞ்கங்களே ! விளம்பரதாரர்களே !
நீங்கள் ஒவ்வொருவரும் தருகின்ற பேராதராவால் “எத்துயர் வரினும் அதை மிதித்தே, நாம் தடம்புரளாத பாதையில் பயணிப்போம்”
தமிழர் திருநாளில் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் சுபீட்சமான வாழ்வும் கிடைக்கப்பெற எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கின்றோம்.
நன்றி
– உங்கள் அரவணைப்பிலிருக்கும்
மு.சுயர்சன்
நிர்வாக ஆசிரியர்