புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ம் , மற்றும் 12ம் சந்தேக நபர்களை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11ம் , 12ம் சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் போது இரு சந்தேகநபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றதடுப்பு புலனாய்வு துறையினர் மன்றில் முன்னிலை ஆகவில்லை அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 20ம் திகதிக்கு நீதவான் ஒத்தி வைத்தார்.
குறித்த கொலை வழக்கு தொடர்பாக பத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு அவர்கள் மீதான வழக்கு விசாரணை பிறிதொரு தினத்தில் நடைபெற்று வருகின்றது.
நேற்றைய தினம் குறித்த வழக்கு நடைபெற்று இருந்தது அதன் போது மேலும் ஒரு சந்தேக நபரை 13 ஆவது சந்தேக நபராக கைது செய்யவுள்ளதாக குற்றதடுப்பு புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து அந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25 ம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.