ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வலியுறுத்தி மத தலைவர்கள், கட்டுரை ஆசிரியர்கள், மற்றும் புத்திஜீவிகள் சிலர் இன்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் அரசியல் தரப்புக்களுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது என சில தினங்களின் முன்னர் வௌியிட்டிருந்தோம்.
அந்த சந்திப்பின் ஒரு அங்கமாகவே இன்றைய சந்திப்பு நடந்தது.
தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழ் மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டு, அந்த சந்திப்பை தவிர்த்து விட்டார்.
இதன்பின்னர் யாழிலுள் சிவில் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள், யாழ் பல்கலைகழக விரிவுரையாளர்கள் சிலர் இணைந்து, சிவில் சமூகமாக இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இரா.சம்பந்தனை சந்திக்க கோரியிருந்தனர். திருமலை ஆயரின் மூலமாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டார்.
இதன்படி, இன்று காலை கொழும்பிலுள்ள சம்பந்தனின் பங்களாவில் இந்த சந்திப்பு நடந்தது.