ஜனாதிபதிக்கோ பாராளுமன்றத்திற்கோ தெரியாமல் இரகசியமாக உள்ளக பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு டயஸ்போர அமைப்புக்களிடம் யோசனை கோரியுள்ளதாக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியலமைப்புக்கு சவால் விடும் வகையில் வெளிவிவகார அமைச்சு சார்பில் வோஷிங்டனிலுள்ள தூதரகம் இந்த அறிவிப்பை செய்திருப்பதாக கூறிய அவர் வெளிநாட்டு தூதுவர்களின் உதவியை பெறமாட்டோம் என்ற ஜனாதிபதியின் முடிவுக்கு மாற்றமாகவே வெளிவிவகார அமைச்சு செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் மறைமுக அடக்குமுறைகள் தொடர்பில் மஹிந்த ஆதரவு அணி முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரேரணையை சமர்பித்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
வாழ்க்கைச் செலவு உயர்வினால் மக்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. வற் வரி கண்டபடி அதிகரிக்கப்பட்டதால் வரி தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிவாரணம் கோரும் மக்களை அரசாங்கம் அடக்கி வருகிறது. அரச சேவைகளில் பல்வேறு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
உள்ளக பொறிமுறை அமைக்கையில் சர்வதேச நீதிபதிகளின் உதவியை பெறப்போவதில்லை என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால் வொசிங்டன் தூதரகம், சர்வதேச நீதிபதிகள் தொடர்பில் டயல்போராக்களின் ஆலோசனையை கோரியுள்ளது. 20ம் திகதி இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு தெரியாமல் இவ்வாறு செயற்பட தூதரகத்திற்கு அதிகார மிருக்கிறதா? பாராளுமன்றத்திற்கு மாற்றமாக செயற்படுவது மோசமான நிலைமையை ஏற்படுத்தும் பாராளுமன்றத்திற்கும் யாப்பிற்கும் மாற்றமாக தூதரகம் செயற்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி, சமூக பின்னடைவு அடக்குமுறை காணப்படுகிறது. நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளது வெளிநாட்டு கையிருப்பு இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த கலாசார நிகழ்வின் போது தாக்குதல் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை பாதுகாக்க முயலவில்லை. பொலிஸாரே அவர்களை பாதுகாத்தனர். மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்க வேண்டும்.