யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை மிரட்டி கப்பம் பெறும் நடவடிக்கைகளை சிலர் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜக்கியதேசியக்கட்சி யாழ்.மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் இவர்களிற்கு ஆதரவாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க செயற்படுவதாகவும் அவ்வாறான செயற்பாடுகளினிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை தான் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தியிருந்த அவர் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை மிரட்டி கப்பம் பெறும் நடவடிக்கைகளை சிலர் மீண்டும் தொடங்கியுள்ளனர். இவர்களிற்கு ஆதரவாக யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க செயற்படுகின்றார்.அவ்வாறான செயற்பாடுகளினிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இதே போன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஈபிடிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் இதற்கு ஆதரவளித்துவருகின்றனர். மக்களது வாக்குகளை பெற்றுவந்த அவர்கள் இத்தகைய மக்கள் விரோத செயற்பாடுகளினிலிருந்து விலகிக்கொள்ளவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களது வாக்குகளை பெற்றிருந்த இத்தலைவர்கள் தம்முடன் கொண்டுதிரிபவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்கவேண்டும். ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலை சூத்திரதாரி ஆர்.ஆர் என்பவர் வவுனியாவில் அரங்கேற்றிய படுகொலைகளிற்கு சாட்சியமாக நான் இருக்கின்றேன். இப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் செயலாளராக இருக்கின்றார்.
வவுனியாவில் கப்பம் கோரி பதைக்கப்பதைக்க கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை வெளியிட தான் தயாராக இருப்பதாக தெரிவித்த துவாரகேஸ்வரன் இவர்களால் நல்லாட்சியின் பலாபலன்கள் தமிழ்மக்களிற்கு கிட்டாமல் போய்விடுவதாகவும் தெரிவித்தார்.