நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலைக்கு சென்ற நிலையில் காணாமல் போன ஐந்து மாணவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் மலை ஏறச் சென்ற போது, காணாமல் போனதாகவும் அவர்களைத் தேடி பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 16.07.2016 அன்றைய தினம் செய்திகள் வெளியாகின.
16.07.2016 அன்று பிற்பகல் 02.00 மணியளவில் அட்டன் ரயில் நிலையத்தை வந்தடைந்த இவர்கள் பின்னர் பஸ்ஸில் ஏறி நோட்டன் பிரிட்ஜ் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, முச்சக்கர வண்டி ஒன்றில் சப்த கன்னியா மலையடிவாரத்துக்கு சென்ற அவர்கள் அங்கு மலையேற முற்பட்டுள்ளனர்.
எனினும் பாதி வழியிலேயே சீரற்ற காலநிலை காரணமாக பாதை தெரியாது பாதிக்கப்பட்ட குறித்த மாணவர்கள், பின்னர் இரவானதும், தாம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை அறிந்து, தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறிவித்துள்ளனர்.
வழித்தவறிய மாணவர்களில் ஒருவரின் அலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியை வைத்துக்கொண்டே அவர்களை தேடும் நடவடிக்கைகளில், படையினர் ஈடுப்பட்டதாக அறியமுடிகின்றது.
இதில் 4 பேர் களனி பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், மற்றையவர் கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பிரிவு மாணவன் என்றும் அறியமுடிகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.