இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் அரசியலில் நீடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சவால்களுக்கு மத்தியில் தான் பெற்ற வாக்கு முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டிற்காக தான் ஆற்றிய சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ, கடந்த திங்களன்று நடந்த பொதுத் தேர்தல் மூலம் மீண்டும் நாடாளுமன்ற அரசியலுக்குள் பிரவேசிக்கின்றார்.
அவர் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பால் இந்தத் தேர்தலில் ஆட்சியமைக்கும் அளவுக்கு இடங்களை வெல்ல முடியவில்லை. அதனால் இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராகும் மகிந்த ராஜபக்ஷவின் கனவும் தகர்ந்துபோனது.
தனது சொந்த மாவட்டத்துக்கு வெளியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ, அவரது கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளில் 89 சதவீதம் அளவுக்கு வாக்குகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.