200 வருட லய வாழ்வில் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு 2020 ஆண்டில் தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்படும். இதனூடாக 25000 தனி வீடுகள் கட்டும் பணி தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாடிவீடுகளுக்கு ஒப்பனை கிடையாது. ஆனால் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமைத்துக் கொடுக்கப்படும் 7 பேர்ச் காணி ஊடான தனி வீடுகளுக்கு அடுத்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு முன்பதாக காணி உறுதிப்பத்திரமும், வீட்டு உரிமை பத்திரமும் தொழிலாளர் மக்களுக்கு கிடைக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய 26.11.2016 அன்று சனிக்கிழமை காலை நுவரெலியா – டயகம தோட்டம் டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் இங்கு உரை நிகழ்த்துகையில்,
மலையக மக்களின் வாழ்வில் எழுச்சியை கொண்டு வருவதற்காக நல்லாட்சி அரசாங்கம் இரண்டு முக்கிய அமைச்சுகளை வழங்கியுள்ளது. இதனூடாக கல்வி மற்றும் தனி வீட்டு அமைப்பு ஆகியவற்றை நிரந்திரமாக்குவதில் நாம் அபிவிருத்தி பணிகளை செய்து வருகின்றோம்.
அதேபோன்று ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்ட பகுதிகளுக்கு மேலதிகமான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும். இதனடிப்படையில் அனைத்து தோட்டப்பகுதிகளிலும் கூரை தகடுகள் மாற்றம் செய்யப்படும்.
அதேவேளை இவ்வாறான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல அடுத்த வருடம் பத்தாயிரம் மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கவுள்ளது. அடுத்த வருடம் இறுதிக்குள் 14000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படும்.
இவ்வாறான அபிவிருத்தி பணிகளை தோட்ட பகுதிகளுக்கு முன்னெடுப்பதில் பலர் தடைகளை போட்டு வருகின்றனர்.
எமக்கு எதிராகவும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும் பல்வேறு சவால்களை விடுப்பவர்கள் தோட்ட பகுதிகளுக்கு சென்று அபிவிருத்தி வேலை திட்டங்களை ஆரம்பிக்கும் கூட்டங்களுக்கு மக்களை செல்ல வேண்டாம் எனவும் கூறு வருகின்றனர்.
ஆனால் அனைத்து தோட்ட தொழிலாளர்களும் வாக்களித்ததன் பயனாகவே இந்த அமைச்சு பதவி எனக்கு கிடைத்தது.
ஆகையால் வேறுபாடுகள் அற்ற ரீதியிலும், கட்சி வேறுபாடுகள் அற்ற ரீதியிலும் எனது அபிவிருத்தி பணிகளை மக்களின் நலன் கருதியே செய்து வருகின்றேன் என்பதை அழுத்தமாகவும், ஆணித்தனமாகவும் கூற விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.